குழந்தையை கவனிப்பதில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு – மனைவி தூக்கிட்டு தற்கொலை

சென்னை அருகே குழந்தையை கவனிப்பதில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை புளியந்தோப்பு டாக்டர் அன்சாரி தெருவைச் சேர்ந்தவர் சல்மா சுல்தானா(வயது 25). இவருக்கு திருமணமாகி 4 வருடங்கள் ஆகின்றது. 3 வயதில் முகமது சுகன் என்ற ஆண் குழந்தை உள்ளது. இவருடைய கணவர், அம்பத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
இவர்களது குழந்தைக்கு கண் பார்வை கோளாறு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் குழந்தையை கவனித்துக்கொள்வது தொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
நேற்று முன்தினம் நள்ளிரவும் இதுதொடர்பாக மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் விரக்தி அடைந்த சல்மா சுல்தானா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.