தள்ளுவண்டியில் முட்டை விற்ற சிறுவனுக்கு வீடு, இலவச கல்வி – குவியும் உதவிகள்!

மத்திய பிரதேசம் இந்தூரில் ரூ.100 லஞ்சம் தராததால் தள்ளுவண்டியில் முட்டை விற்பனை செய்த சிறுவனின் கடையை மாநகராட்சி அதிகாரிகள் கவிழ்த்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து சிறுவனுக்கு வீடு, கல்வி உதவி, பண உதவிகள் குவிகிறது.
கடந்த வியாழனன்று இந்தூரில் தள்ளுவண்டியில் 13 வயது சிறுவன் முட்டைகளை வைத்து விற்பனை செய்து வந்தான். அவனிடம் ‘கடையை காலி செய் இல்லையென்றால் நூறு ரூபாய்’ லஞ்சம் கொடு என்று மாநகராட்சி அதிகாரிகள் கேட்டுள்ளனர்.
ஊரடங்கினால் வியாபாரம் இல்லை என சிறுவன் கெஞ்சினான். அதனை பொருட்படுத்தாமல் இரக்கமின்றி மொத்த முட்டைகளோடு தள்ளுவண்டியை கவிழ்த்துச் சென்றனர் ஊழியர்கள். இச்சம்பவத்தை சிறுவன் விவரிக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி கடும் கண்டனத்தை பெற்றது.
இந்த நிலையில் சிறுவனின் குடும்பத்திற்கு இந்தூர் பா.ஜ.க எம்.எல்.ஏ ரமேஷ் மென்டோலா, பிரதம மந்திரி ஆவாஸ் திட்டத்தின் கீழ் வீடு பெற்றுத்தருவதாக கூறியுள்ளார். சிறுவனுக்கு சைக்கிளும், ரூ.2,500 பணமும் தந்துள்ளார்.
காங்கிரஸின் திக் விஜய் சிங் ரூ.10 ஆயிரம் நிதி உதவி செய்துள்ளார். இரண்டு பிள்ளைகளின் படிப்பு செலவை ஏற்பதாக உறுதியளித்துள்ளார். ராகுல் காந்தி அலுவலகம், பா.ஜ.க.,வின் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரும் சிறுவனுக்கு உதவுவதாக உறுதியளித்துள்ளனர். இது தவிர பொது மக்கள் பலரும் சிறுவனுக்கு பண உதவி செய்துள்ளனர்.