அக்டோபர் 7ஆம் தேதி அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வர் வேட்பாளராக அறிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பிக்கள், துணை முதல்வர், முதல்வர் என அனைவரும் பங்கேற்றிருந்தனர். கொரோனா நோய் தொற்றின் காரணமாக இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு தமிழக அரசு சில விதிமுறைகளை அறிவித்திருந்தது.
ஆனால் முதல்வர் தலைமையில் நடைபெற்ற விழாவில் கொரோனா நோய்த் தடுப்பு விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை என திருவொற்றியூரை சேர்ந்த வழக்கறிஞர் தொண்டன் சுப்பிரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா, மனுதாரர் தாக்கல் செய்துள்ள புகைப்படங்களில் இருந்து அந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் முகக்கவசம் அணிந்திருந்தாலும் தனி மனித இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டினர்.
மேலும், இதுதொடர்பாக சுகாதாரத்துறைச் செயலர், சென்னை மாநகராட்சி ஆணையர், மாநகராட்சி சுகாதார அதிகாரி, பேரிடர் மேலாண்மை மையஅதிகாரி உள்ளிட்டார் வரும் ஜனவரி 6ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
