6 மாதம் கடன் தவணை நீட்டிப்பை பயன்படுத்தாதவர்களுக்கு கேஷ்பேக் – மத்திய அரசு பரிசீலனை

கொரோனா கால கடன் தவணை சலுகையைப் பெறாமல், முறையாக வட்டி செலுத்திய வாடிக்கையாளர்கள் மற்றும் சிறு, குறு நிறுவனங்களுக்கு, கேஷ்பேக் வழங்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
கொரோனா பரவல் காரணமாக, வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி இஎம்ஐ தொகையை திருப்பிச் செலுத்த 6 மாத காலம் அவகாசத்தை மத்திய அரசு வழங்கியது.
இந்தக் காலகட்டத்தில் தவணைத் தொகையை செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு, இந்த 6 மாதங்களுக்கான அசல் மற்றும் வட்டித் தொகைக்கு வட்டி விதிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக வருவாய் இன்றி தவித்து வரும் வாடிக்கையாளர்களிடம் வட்டிக்கு வட்டி வசூலித்தால் மேலும் சுமை அதிகரிக்கும் என குற்றம்சாட்டி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, வட்டிக்கு வட்டி அதாவது கூட்டு வட்டி விதிப்பதை தள்ளுபடி செய்வதாக மத்திய அரசு தெரிவித்தது.
2 கோடி ரூபாய் வரை கடன் பெற்ற வாடிக்கையாளர்கள், தங்கள் சிறுகுறு நிறுவன கடன், வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன் உள்ளிட்டவற்றுக்கு வட்டிக்கு வட்டி செலுத்த வேண்டியதில்லை எனவும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. இந்த நிலையில் இஎம்ஐ கால அவகாசம் பெறாமல் முறையாக வட்டியைச் செலுத்தி வந்த வாடிக்கையாளர்கள் மற்றும் சிறு, குறு நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு கேஷ்பேக் வழங்க மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வட்டிக்கு வட்டி செலுத்த வேண்டியதில்லை என்ற மத்திய அரசின் திட்டத்துக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், கடனை தவறாமல் செலுத்தியவர்களுக்கு கேஷ்பேக் வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா கால நெருக்கடியிலும் கடன் தொகையை திருப்பிச் செலுத்தியதைப் பாராட்டுவதற்காக மத்திய அரசு இம்முடிவை எடுத்துள்ளது.