ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்த வாலிபர்!!

காதலை கைவிட்டதால் ஆத்திரம் அடைந்த வாலிபர், ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சையை அடுத்த நடுக்காவேரி அரசமரத்து தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் அஜித்(வயது 24). கார் மெக்கானிக்கான இவர், 19 வயது இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். அந்த இளம்பெண், தஞ்சையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. தாவரவியல் துறையில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாதம் முதல் கல்லூரி திறக்கப்படாததால் அந்த மாணவி, வெளியூருக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இறுதியாண்டு படிக்கும் மாணவ, மாணவிகளுக்காக கல்லூரி திறக்கப்பட்டது. இதனால் வெளியூருக்கு சென்றிருந்த மாணவி, சொந்த ஊருக்கு வந்து கல்லூரிக்கு சென்று வந்தார். நேற்று காலை வழக்கம்போல் சொந்த ஊரில் இருந்து கல்லூரிக்கு வருவதற்காக பஸ்சில் தஞ்சை தற்காலிக பஸ் நிலையத்திற்கு வந்தார்.

பின்னர் அங்கிருந்து புதிய பஸ் நிலையம் நோக்கி சென்ற அரசு பஸ்சில் ஏறி, கல்லூரி அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் இறங்குவதற்காக டிக்கெட் எடுத்தார். அதே பஸ்சில், அஜித்தும் பயணம் செய்தார். மாணவி அமர்ந்து இருந்த இருக்கையின் பின்புறத்தில் இவர் அமர்ந்து இருந்தார். அப்போது இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

தன்னை மீண்டும் காதலிக்க வேண்டும் என அந்த மாணவியிடம் அஜித் வலியுறுத்தி உள்ளார். அதற்கு அந்த மாணவி கோபத்தில் தன்னோடு இனிமேல் பழக வேண்டாம் என கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அஜித், பையில் தான் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியை (சிறிய கத்தி) எடுத்து எனக்கு கிடைக்காத நீ, யாருக்கும் கிடைக்கக்கூடாது என கூறி மாணவியின் கழுத்தை அறுத்தார்.

இதனால் ரத்த வெள்ளத்தில் அந்த மாணவி பஸ்சுக்குள்ளேயே மயங்கி விழுந்தார். ஓடும் பஸ்சில் மாணவியின் கழுத்தை அறுப்பதை பார்த்த சக பயணிகள் அதிர்ச்சி அடைந்ததுடன், அலறி அடியடித்தபடி அங்கும் இங்குமாக ஓடினர்.

பயணிகளின் அலறல் சத்தம் கேட்டவுடன் பஸ்சை டிரைவர் நிறுத்தினார். உடனே பஸ்சில் இருந்து கீழே இறங்கிய அஜித் அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனால் அவரை பிடிக்கும்படி பயணிகள் சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

இந்த சம்பவம் குறித்து தஞ்சை தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் போதுமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். படுகாயம் அடைந்த மாணவியை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த மாணவி அங்கிருந்து தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

பிடிபட்ட அஜித்தை தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் கிடைத்த பரபரப்பு தகவல்கள் வருமாறு:-

அஜித்தும், அந்த மாணவியும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் அஜித்தின் பழக்க வழக்கங்களில் மாறுதல் ஏற்பட்டது. அவர் மது அருந்தும் தகவல் கிடைத்ததால் காதலர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அஜித் நடவடிக்கையின் மாறுதல் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதல் வேண்டாம் என கூறி அஜித்தை விட்டு அந்த மாணவி விலகி சென்றார். ஆனாலும் அஜித் தொடர்ந்து வற்புறுத்தி வந்த நிலையில் மாணவி வெளியூருக்கு சென்று விட்டார்.

மீண்டும் கல்லூரி திறக்கப்பட்டதால் 3 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த மாணவியிடம் தன்னை மீண்டும் காதலிக்க வேண்டும் என அஜித் வற்புறுத்தியுள்ளார். ஆனால் மாணவி மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்த அவர், காதலிக்கவில்லை என்றால் உன்னை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்து போன மாணவி தனது பெற்றோரிடம் இந்த தகவலை தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நேற்று கல்லூரிக்கு வந்த மாணவியை கொலை செய்யும் நோக்கில் அஜித் அவரது கழுத்தை அறுத்துள்ளார்.

மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து மாணவியை கொலை செய்ய முயன்றதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்தை கைது செய்து தஞ்சை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, திருவிடைமருதூர் கிளை சிறையில் அடைத்தனர். காதலை கைவிட்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவியின் கழுத்தை வாலிபர் அறுத்த சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x