மேகாலயாவில் 90 வயது முதியவரை உயிருடன் புதைத்த ஆசாமிகள் கைது!!

மேகாலயா மாநிலம் மேற்கு காசி மலை மாவட்டத்தை சேர்ந்த மோரிஸ் மரக்னர் (90) என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன் சிலர் உயிருடன் புதைத்துவிட்டனர்.
தகவலறிந்த போலீசார், புதைக்கப்பட்ட முதியவரின் சடலம் வெளியே எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி கர்ஜானா கூறுகையில், ‘மோரிஸ் மரக்னர் குடும்ப உறுப்பினர்கள் சிலர் மீது மந்திரம், பில்லி, சூனியம் போன்ற வேலைகளை செய்வார்.
கடந்த சில நாட்களுக்கு முன், அந்த கிராமத்தில் குழந்தை ஒன்று காணாமல் போயுள்ளது. இவர் மீது சந்தேகமடைந்த சிலர், அவரின் கைகால்களை கட்டி புதைத்துவிட்டனர். போலீஸ் விசாரணைக்கு பின், ஐந்து அடி ஆழமான குழியிலிருந்து சடலம் வெளியே எடுக்கப்பட்டது. இறந்த முதியவரின் உடலின் கை, கால்கள் கட்டப்பட்டு முகம் மூடப்பட்டிருந்தது.
இந்த கொலை வழக்கு தொடர்பாக இதுவரை 8 பேர் கைதாகி உள்ளனர். மூன்று முக்கிய குற்றவாளிகள் டேனியல்ஸ், ஜேல்ஸ் மற்றும் டிஃபர்வெல் ஆகியோர் ஞாயிற்றுக் கிழமை கைது செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கில் 18 குடும்ப உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது’ என்றார்.