ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிரான வழக்கில் இருந்து விலகிய உச்சநீதிமன்ற நீதிபதி!!!

ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிரான பொது நல வழக்கில் இருந்து தாம் விலகுவதாக உச்சநீதிமன்ற நீதிபதி உதய் உமேஷ் லலித் அறிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி என்.வி.ரமணா மீது குற்றச்சாட்டு தெரிவித்து தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவிற்கு ஆந்திர முதல்வர் ஜெகன்கோகன் ரெட்டி கடந்த மாதம் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியிருந்தார். அதில், நீதிபதி என்.வி.ரமணா தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக செயல்படுவதாக தெரிவித்திருந்தார்.
அதனை தொடர்ந்து, அம்மாநில அரசு சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்துள்ளது. அதற்கு எதிராக இரண்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதில் வக்கீல் ஜி.எஸ்.மணி தாக்கல் செய்த மனுவில், “நீதிபதி என்.வி.ரமணாவுக்கு எதிராக ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்த குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்து அவற்றை தள்ளுபடி செய்ய வேண்டும். பதவியை தவறாக பயன்படுத்தியதால், முதல் அமைச்சர் பதவியை நிர்வகிக்க ஜெகன்மோகன் ரெட்டிக்கு அதிகாரம் இல்லை என அறிவிக்க வேண்டும்” என கோரியிருந்தார்.
இன்னொரு வக்கீல் சுனில்குமார் சிங் தாக்கல் செய்த மனுவில், “நீதிபதிகளுக்கு எதிராக செய்தியாளர்கள் சந்திப்பை நடத்துவதற்கு தடை போட வேண்டும், ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக ஏன் நடவடிக்கை மேற்கொள்ள கூடாது” என கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்க கோரியிருந்தார்.
இப்படியிருக்கும் பட்சத்தில், நீதிபதி என்.வி.ரமணாவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை தெரிவித்த ஆந்திர முதல் அமைச்சருக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதி யு.யு.லலித் விலகுவதாக தெரிவித்துள்ளார் .