தடை செய்யப்பட்ட செயலிகளை பயன்படுத்தினால்… என்ன நடக்கும்?

சீனா தொடர்பான பல மொபைல் செயலிகளுக்குக் கடந்த சில மாதங்களுக்கு முன் மத்திய அரசுத் தடை விதித்தது. இது அனைவருக்கும் தெரிந்ததே. இருப்பினும், பல மொபைல் செயலி தடை செய்தபோதிலும், சிலர் இன்னும் தடைசெய்யப்பட்ட செயலிகளைப் பயன்படுத்துகின்றனர்.
இந்தச் சூழலில் தடைசெய்யப்பட்ட மொபைல் செயலிப் பயன்படுத்துவதில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று சிலர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்துள்ள மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தடைசெய்யப்பட்ட செயலிகளைப் பயன்படுத்துவது தொடர்பாக ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், பிரிவு 69 ஏ இன் கீழ் மொபைல் ஆப் நிறுவனங்கள் மட்டுமே அரசு விதித்த தடை பின்பற்றாததற்காக அபராதம் விதிக்கப்படும். தடைசெய்யப்பட்ட மொபைல் செயலிகளான PUBG, TikTok மற்றும் UC Browser போன்றவற்றைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராகத் தனிப்பட்ட அபராதம் அல்லது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்று கூறியது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் மத்திய அரசு தடைசெய்யப்பட்ட சீன செயலி பயனர்களுக்கும் இது பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 15 அன்று இந்தோ-சீனா எல்லையில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து சீன செயலிகளைத் தடை செய்ய மத்திய அரசு தொடங்கியது.
அதன் பின்னர், இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை தாண்டிய பதட்டங்கள் அதிகமாகவே ஏற்பட்டது. தற்போது அந்தப் பதட்டம் குறைந்துள்ளது. இதுவரை, 200-க்கும் சீன செயலிகள் மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.