ஆண் வேடமிட்டு கசாயம் விற்ற 7 வயது சிறுமி; நெகிழ வைக்கும் சம்பவம்

தனது தாயின் கஷ்டத்தை போக்குவதற்கு, 7 வயது சிறுமி ஒருவர் ஆண் வேடமிட்டு சுக்குமல்லி கசாயம் விற்று வருவது ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி ஜோதிவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரஹ்மத்பானு. இந்த பெண்ணின் கணவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இறந்துள்ளார். இவருக்கு, 3 பிள்ளைகள் உள்ளனர். மூத்த மகளுக்கு மட்டும் திருமணம் முடிந்துள்ளது. அதற்கடுத்து, 7ம் வகுப்பு படிக்கும் மகளும், 2ம் வகுப்பு படிக்கும் சிறுவனும் தாயுடன் வசிக்கின்றனர்.
இந்நிலையில் ஊரடங்கின் காரணமாக வேலையின்றி தவித்த தாய் சுக்குமல்லி கஷாயம் விற்று வந்துள்ளார். இந்நிலையில், தாய்க்கு 7 வயது சிறுமி உதவ விரும்பியுள்ளார். ஆனால், தனது மகளின் பாதுகாப்பினை நினைத்து தாய் ரஹ்மத்பானு கலங்கியுள்ளார்.
இதனால், தனது மகளின் முடியினை வெட்டியதோடு, சிறுமிக்கு ஆண்கள் அணியும் உடையினைக் கொடுத்து ஆண் போல் மாற்றியுள்ளார். மேலும் மகளுக்கு துணையாக சிறுவனையும் சுக்குமல்லி கசாயம் விற்பதற்கு அனுப்பியுள்ளார் ரஹ்மத்பானு.
தற்போது இரண்டு பிள்ளைகளும் குட்டி சைக்கிளில் கசாயம் விற்று வருகின்றனர். இந்நிலையில், இதைக் கேள்விப்பட்ட ஃபரிதா நவாப் என்பவர், அந்த குடும்பத்துக்கு 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அளித்தார். இதுபோல், பலரும் உதவி செய்ய முன்வந்துள்ள வண்ணம் உள்ளனர்.