அரியர் தேர்வில் தேர்ச்சி பெற வைப்பதாகக் கூறி மோசடி செய்தவர் வீட்டில் சிறை வைப்பு!!

அரியர் தேர்வில் தேர்ச்சி பெற வைப்பதாகக்கூறி ரூ.1.5 லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றிய நபரை முறையின்றி வீட்டில் சிறை வைத்த மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை, துரைப்பாக்கம், சந்திரசேகர் நகரில் வசித்து வருபவர் முரஜ்ஜமால் (26). இவர், தனது நண்பரான அடையாரைச் சேர்ந்த யுவராஜ் என்பவரிடம் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பி.பி.ஏ., அரியர் தேர்வில் தேர்ச்சி பெற வைப்பதாக கூறி ரூ.1.50 லட்சம் பணம் வாங்கியுள்ளார். ஆனால் சொன்னபடி தேர்வில் தேர்ச்சி பெற உதவி செய்யாமலும், பணத்தைக் கொடுக்காமலும் ஏமாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் முரஜ்ஜமால் தனது நண்பர் தேவ்ஆனந்த் என்பவருடன் நேற்று இரவு திருவான்மியூர், ஜெயந்தி சிக்னல் அருகே நின்று கொண்டிருந்தபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் தனது 2 நண்பர்களுடன் வந்த யுவராஜ், முரஜ்ஜமாலை பார்த்ததும் பணத்தை திரும்பக் கேட்டு தகராறு செய்துள்ளார்.
மேலும் முரஜ்ஜமாலை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். இது குறித்து தேவ் ஆனந்த் திருவான்மியூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட அடையாரை சேர்ந்த யுவராஜ் (25), வள்ளுவர் நகரை சேர்ந்த அருள்தாஸ் (23), திருவான்மியூரை சேர்ந்த ஜோஸ்வா (20), ஆகிய மூன்று நபர்களை கைது செய்தனர். மேலும் விசரணையில் யுவராஜ் தனது வீட்டில் முரஜ்ஜமாலை சட்ட விரோதமாக சிறை வைத்து பணத்தை திரும்ப கேட்டு தகராறு செய்ததும் தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மூவரையும் பிணையில் அனுப்பி வைத்தனர்.