‘ஏசுநாதரை சுட்ட கோட்சே வாரிசு’..? சலசலப்பை ஏற்படுத்திய அமைச்சரின் பேச்சு

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே முளையூர் கிராமத்தில் அம்மா மினி கிளினிக்கைத் திறந்துவைத்து அரசின் நலத்திட்டங்களை வழங்கி வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது:
மக்கள் நலத்திட்டங்கள் எதைச் செய்தாலும் எதிர்க்கட்சி தலைவர் இந்த அரசின் மீது குற்றம்சாட்டிக்கொண்டே இருக்கிறார். பொங்கல் பரிசாகப் பொதுமக்களுக்கு அரசு ரூ.2500 வழங்குவதாக அறிவித்தது. இத்துடன் இலவச வேட்டி, சேலையையும் சேர்த்தால் ரூ.3000 ஆகிறது. இது ஏமாற்று வேலை என்கிறார் எதிர்க்கட்சி தலைவர்.
மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம் என்பார்கள். அதுபோல திமுக ஆட்சியில் அவங்க அப்பா செய்திருந்தால் புத்தர்கள் வாரிசு, ஏசுநாதர் வாரிசு என்றிருப்பார்கள். அதையே நாங்க செய்தால் ‘ஏசுநாதரை சுட்ட கோட்சே வாரிசு’ என்கிறார்கள். இந்த அரசு எதைச் செய்தாலும் தப்பு சொல்கிறார்கள் என்று பேசினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஏசுநாதரைச் சுட்ட கோட்சே வாரிசு என்ற அமைச்சரின் இந்தப் பேச்சு கூட்டத்தினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.