ஜனவரி 27-ம் தேதி விடுதலையாகும் சசிகலா? – வெளியான தகவல்

பெங்களூரு சிறையில் இருந்து ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலையாக வாய்ப்பு உள்ளது என சசிகலா விடுதலை குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா தரப்பு வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார்.
சசிகலாவுக்கு எதிரான வருமான வரித்துறை வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பான கூடுதல் விவரங்களை நீதிபதிகள் கேட்டிருந்தனர். அப்போது, சசிகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஒரு முக்கியமான தகவலை தெரிவித்தார். சசிகலா தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், ஜனவரி 27ஆம் தேதி பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா விடுதலையாக உள்ளார். அவர் விடுதலையான பிறகு வழக்கு பற்றி அவரிடம் கூடுதல் விளக்கம் பெற்று நீதிமன்றத்தில் பதில் அளிக்க விரும்புகிறோம். எனவே நீங்கள் கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பிப்ரவரி 4ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்துள்ளனர்.
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூவருக்கும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ. 10 கோடியே 10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த தொகையை செலுத்தினால் அவர் 2021ஆம் ஆண்டு ஜனவரியில் விடுதலையாக வாய்ப்பு உள்ளதாக ஆர்.டி.ஐ மூலம் தகவல் வெளியானது. இந்நிலையில் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த அபராத தொகையை செலுத்திவிட்டதால், ஜனவரி 27ம் தேதி விடுதலையாக வாய்ப்பு உள்ளது.
அந்த வகையில் அதன் அடிப்படையில் வழக்கறிஞர் தெரிவித்தாரா அல்லது விடுதலை தேதியை குறித்து சசிகலா தரப்புக்கு தெரிவிக்கப்பட்டிருக்கலாம் என்றும் பேசப்படுகிறது. இன்னும் சில மாதங்களில் தமிழக சட்டபை தேர்தல் வெளியாக உள்ள நிலையில், விடுதலை குறித்தான செய்தியால் சசிகலா, தினகரன் தரப்பினர் உற்சாகமடைந்துள்ளனர்.