வெளிநாட்டில் இருந்து 5 ஆயிரம் கோடி கடன் வேண்டுமா?.. 2 பேர் கைது!!

வெளிநாட்டில் இருந்து 5 ஆயிரம் கோடி கடன் பெற்று தருவதாக கூறி, 45 கோடி மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளா மாநிலம் மாவேலிக்கராவை சேர்ந்தவர் ஜாசரியா பால். இவரின் தந்தை குரியன் பவுலோஸ். இவர் கேரளாவில் உள்ள தனது மருத்துவமனையை விரிவுபடுத்த வேண்டி பணம் கடன் பெற முயற்சி செய்துகொண்டு இருந்தார்.
இந்தநிலையில், சென்னையை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பெங்களூரை சேர்ந்த அஸ்வின் ராவ் ஆகிய இருவரும் குரியன் பவுலோஸிடம் வெளிநாட்டில் இருந்து 5 ஆயிரம் கோடி கடன் பெற்று தருவதாக கூறி, அதற்காக முன்பணமாக 45 கோடி வேண்டும் என கூறியுள்ளனர். பிறகு அவர்களின் வங்கி கணக்கில் பல தேதிகளில் 45 கோடி வரை பணம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், பணத்தை பெற்றுக்கொண்டு சொன்னபடி கடன் தொகையை வெளிநாட்டு வங்கியில் இருந்து பெற்று தராமலும், வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காமலும் 45 கோடி ஏமாற்றியதாக ஜாசரியா பால் மத்திய குற்றப்பிரிவில் புகார் கொடுத்தார். அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்டு சென்னை, அண்ணா நகர், ஆபிசர் காலனியை சேர்ந்த ஜெயராஜை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக இருந்த அஸ்வின் ராவை தேடி வந்தனர்.
இந்த நிலையில் பெங்களூரில் அஸ்வின் ராவ் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது அதன் பேரில் தனி படை விரைந்து சென்று கர்நாடக மாநிலம் பெங்களூர் தோட்டா பானஸ்வாடி பகுதியில் பதுங்கி இருந்த அஸ்வினை போலீசார் கைது செய்தனர். இதைதொடர்ந்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவரை நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.