பட்டியலினத்தை சேர்ந்தவரை காலணியால் அடித்த அதிமுக பிரமுகரின் சகோதரர்!!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பங்குடி அருகே 100 நாள் வேலை பார்த்த பட்டியலினத்தை சேர்ந்தவரை காலணியால் அடித்த அதிமுக பிரமுகரின் சகோதரர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் குழந்திராம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட கூத்தாலம்மன் கோவில் அருகே 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வந்துள்ளது. அதே கிராமத்தில் வசிக்கும் பட்டியலினத்தவரை சேர்ந்த சிவகுமார் என்ற பணியாளரும் மரக்கன்று நடும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த பணிகளை ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்துக் கொண்டிருந்த போது அதே கிராமத்தை சேர்ந்த தொழிலதிபர் கரிகாலன் என்பவரும் மரக்கன்றுகள் நடுவதை பார்வையிட்டு வந்துள்ளார்.
அப்போது சிவகுமார் முறையாக பணி செய்யவில்லை என கூறி கரிகாலன் சிவகுமாரை காலணியால் அடித்துள்ளார். இது தொடர்பாக சிவகுமார் அளித்த புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கரிகாலன் புதுக்கோட்டை மாவட்ட அதிமுக பாசறை செயலாளர் கருப்பையாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
கரிகாலனை கைது செய்ய பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 100 நாள் வேலை பார்த்து கொண்டிருந்த பட்டியலினத்தவரை முறையாக பணி செய்யவில்லை என கூறி அதிமுக பிரமுகரின் சகோதரர் காலணி கொண்டு தாக்கியது அப்பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.