நாடு முழுவதும் மொஹரம் பண்டிகை ஊர்வலங்களுக்கு தடைவிதித்த உச்சநீதிமன்றம்!

நாடுமுழுவதும் இஸ்லாமிய மதத்தின் புத்தாண்டான மொஹரம் பண்டிகை ஊர்வலங்களுக்கு தடைவிதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிப்டே முகமது என்பவர் கடந்த 25-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில் நாடு முழுவதும் சியா பிரிவு இஸ்லாமியர்கள் மொஹரம் பண்டிகையன்று காலை ஊர்வலங்களை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும், அரசு விதிக்கும் கட்டுப்பாடுகள் முறையாக கடைப்பிடிக்கப்படும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார். அத்துடன் புரி ஜெகநாதர் ஆலய ரத யாத்திரை மற்றும் மும்பையில் சில ஜெயின் கோவில்களில் பிரார்த்தனைக்கு அனுமதியளித்து உத்தரவுகள் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
அந்த வழக்கு தலைமை நீதிபதி பாப்டே, நீதிபதிகள் போபண்ணா மற்றும் ராமசுப்ரமணியம் ஆகியோரிடம் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் நாட்டின் 28 மாநிலங்களையும் நான்கு வாரங்களுக்குள் எதிர்மனுதாரர்களாக சேர்க்குமாறு மனுதாரருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில் வியாழனன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் இன்னும் மாநிலங்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்காததை சுட்டிகாட்டிய நீதிமன்றம், “கொரோனா தொற்றுக் காலத்தில் நாடு முழுவதும் பேரிடர் மேலாண்மைச் சட்டம் மூலம் இத்தகைய கூட்டங்கள் நடப்பதைத் தடுக்க வேண்டியது மாநில அரசுகளின் பொறுப்பு. எனவே மாநிலங்களிடம் கருத்துக் கேட்காமல் இந்த வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க இயலாது. எனவே அதுவரை நாடுமுழுவதும் மொஹரம் பண்டிகை ஊர்வலங்களுக்கு தடைவிதித்து உத்தரவிடப்படுகிறது” என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.