“நல்ல காமெடி பண்றீங்க ஜெயக்குமார்!!” எஸ்.வி.சேகரின் ‘நச்’ பதிலடி!!!

சமீபத்தில் எஸ்.வி. சேகர் ஒரு வீடியோவை வெளியிட, அது அரசியலில் பெரும் விவாதத்தை எழுப்பி இருக்கிறது. அதில் அதிமுக கட்சி கொடியில் இருந்து அண்ணாவின் படத்தை நீக்கி விடுங்கள் என்று கூறியிருந்தார்.
இது குறித்து சென்னையில் அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய அவர், எஸ்.வி.சேகரை அடையாளம் காட்டியவர் ஜெயலலிதா. அண்ணா திமுக கொடியை காட்டி தான் அவர் ஓட்டு வாங்கி 5 ஆண்டுகள் எம்எல்ஏவாக இருந்தார்.
ஆகையால் மானம், ரோஷம் இருந்தால் 5 ஆண்டு சம்பளம், இப்போது அவர் பெற்றுக் கொண்டு இருக்கும் பென்ஷன் எல்லாவற்றையும் திருப்பி தர முடியுமா என்று கேள்வி எழுபியிருந்தார்.
இதற்கு எஸ்.வி. சேகர் தற்போது பதில் தந்துள்ளார். தன்னுடைய டுவிட்டர் பதிவில் அவர் “நான் ஒரு முறை கூட ஜெயலலிதா காலில் விழுந்ததில்லை. சசிகலாவை சந்தித்தது இல்லை. நான் விசுவாசியல்ல. நேர்மையானவன். 2 ஜோடி கால்களைத் தவிர முகத்தையே நிமிர்ந்து பார்க்காதவர்களுக்கு நான் என் கருத்தில் உறுதியாக இருக்கின்றேன். MGR JJ படத்தை அதிமுக கொடியில் போட முடியாது என சொல்வீர்களா?” என்று கேட்டுள்ளார்.
தொடர்ந்து மற்றொரு பதிவையும் அவர் வெளியிட்டு உள்ளார். அதில் “என் MLA சம்பளம், என் ஓயூதியம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. அதிமுகவினால் அல்ல. என் சம்பளம் தவிர ஒரு பைசா கூட கமிஷனாக சம்பாதிக்காதவன் நான். அப்படி எத்தனை விசுவாசிகள்!?. யோசியுங்கள். புரியும். இல்லை அம்மாவின் ஆத்மா புரியவைக்கும். “மான ரோஷம்” நல்ல காமெடி” என்று தனது பக்கத்தில் பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளார்