20 லட்சம் பேருக்கு வைத்தியம்; இந்திய டாக்டரின் கின்னஸ் சாதனை!

மேற்கு வங்காள மாநிலம் போல்பூரைச் சேர்ந்த ஒரு ரூபாய் டாக்டர் என்று மக்களால் அழைக்கப்பட்ட சுஷோவன் பானர்ஜி கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். இவரது வாழ்நாளில் அதிகமான நோயாளிகளுக்கு வைத்தியம் பார்த்ததற்காக இவருக்கு இந்தப் பெருமை கிடைத்துள்ளது.
சுஷோவன் பானர்ஜி, கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவப் பட்டமும், கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் தங்கப் பதக்கத்துடன் முதுநிலை மருத்துவப் பட்டமும், லண்டனில் மருத்துவ டிப்ளோமாவும் பெற்றவர்.
போல்பூரில் மருத்துவராகப் பணியாற்ற தொடங்கிய பானர்ஜி கடந்த 57 ஆண்டுகள் மருத்துவப் பணியில் 20 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு மருத்துவம் பார்த்து வருகிறார். போல்பூர், அதை சுற்றியுள்ள பகுதிகள் மட்டுமின்றி, தொலைவில் உள்ள பிர்பும் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் அவரிடம் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல ஆண்டுகளாக இவர் ஒரு ரூபாய் மட்டுமே கட்டணமாகப் பெற்று வந்ததால், ‘ஒரு ரூபாய் டாக்டர்’ என்று அங்குள்ள மக்களால் அழைக்கப்பட்டார்.
கின்னஸ் சாதனை குறித்து டாக்டர் சுஷோவன் பானர்ஜி, “இந்த கெளரவம், இன்னும் நிறைய நோயாளிகளுக்கு வைத்தியம் பார்க்கும் உத்வேகத்தை அளிக்கிறது. முதுமை காரணமாக முன்பு போல் என்னால் நடமாட முடியவில்லை. ஏழை நோயாளிகளால்தான் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற முடிந்தது. அதனால் அவர்களுக்கே இந்த கெளரவத்தை அர்ப்பணிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
1984ஆம் ஆண்டு, காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்துள்ள சுஷோவன் பானர்ஜிக்கு இந்த (2020) ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது கொடுத்து கெளரவித்தது.