மருத்துவ மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை இறுதி செய்ய வேண்டாம்: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மருத்துவ மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை இறுதி செய்ய வேண்டாம் என அனைத்து கல்லூரிகளுக்கும் அறிவுறுத்த தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ மேற்படிப்புக்கான இடங்களில் பல இடங்கள் காலியாக உள்ளதால், அந்த இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தி, மாணவர் சேர்க்கை வழங்கக்கோரி மருத்துவர்கள் அரவிந்த், கீதாஞ்சலி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் மருத்துவ மேற்படிப்புக்கு மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், காலியிடங்களுக்கு தனியாக கலந்தாய்வு நடத்த இயலாது என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தகுதியான மாணவர்களுக்கு நீதி வழங்கும் வகையில், மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகும்படி தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், இந்த வழக்கில் அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை, மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையை இறுதி செய்ய வேண்டாம் என, அனைத்து கல்லூரிகளுக்கும் தமிழக அரசு அறிவுறுத்த உத்தரவிட்டு, விசாரணையை வரும் 14-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.