கொரோனா தடுப்பூசி யாருக்கு போடலாம், யாருக்கு போடக்கூடாது ?

கொரோனா தடுப்பூசி யாருக்கு போடலாம், யாருக்கு போடக் கூடாது என்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போட வேண்டும். ஒரு டோஸ் தடுப்பு மருந்து கொடுத்தால் அதன் பிறகு 14 நாட்கள் கழித்தே அடுத்த டோஸ் கொடுக்க வேண்டும்.
முதல் டோசில் எந்த வகை தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டதோ, அதே தடுப்பு மருந்துதான் இரண்டாவது டோசிலும் கொடுக்கப்பட வேண்டும். தடுப்பு மருந்துகளை மாற்றிக் கொடுத்துவிடக் கூடாது.
குறிப்பிட்ட மருந்துகள், உணவுப் பொருட்கள், தடுப்பு மருந்துகள் அல்லது ஊசி மருந்துகளால் ஒவ்வாமை ஏற்படக் கூடியவர்கள், கொரோனா தடுப்பு மருந்து முதல் டோசின்போது ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தடுப்பூசி போடக் கூடாது.
கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்குத் தடுப்பூசி போடக் கூடாது, கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ளவர்கள், பிளாஸ்மா சிகிச்சை பெற்றவர்கள், நோயால் உடலநலம் குன்றி மருத்துவமனைகளில் இருப்பவர்களுக்கும் தடுப்பூசி போடக் கூடாது.