டெண்டுல்கர், லதா மங்கேஷ்கரை மத்திய அரசுக்கு ஜால்ரா போடவைத்தது தவறு – ராஜ்தாக்கரே கடும் தாக்கு

விவசாயிகள் போராட்ட பிரச்னையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் தெண்டுல்கர், பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் ஆகியோரை மத்திய அரசுக்கு ஆதரவாக பேசவைத்தது மிகப்பெரிய தவறு என மஹாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் திரு. ராஜ் தாக்கரே கடுமையாக விமர்சித்துள்ளார்.
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக வெளிநாடுகளைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனை இந்தியாவின் பிரபலங்கள் சிலர் விமர்சித்தனர். குறிப்பாக, தெண்டுல்கர், லதா மங்கேஷ்கர், நடிகர் அக்ஷய்குமார் ஆகியோர், இந்திய விவகாரங்களில் வெளிநாட்டினர் மூக்கை நுழைக்கவேண்டாம் என ட்விட்டரில் பதிவிட்டிருந்தனர். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மஹாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் திரு. ராஜ்தாக்கரே, பாரத ரத்னா விருது பெற்ற தெண்டுல்கர், லதா மங்கேஷ்கர் ஆகிய இருவருரிடம் மத்திய அரசு ஆதரவை கேட்டிருக்கக்கூடாது எனக் கூறினார். அவர்கள் இருவரின் பெயருக்கும் இதன்மூலம் களங்கம் ஏற்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். அக்ஷய் குமார் போன்றவர்கள் பேசுவதால், ஒன்றும் ஆகிவிடாது என்றும் ராஜ்தாக்கரே விமர்சித்தார்.