சளிக்கு ஊசி போட்டுக்கொண்ட புதுமாப்பிள்ளை.. இறந்துபோன பரிதாபம்

ஜலதோஷத்துக்கு ஊசி போட்ட புதுமாப்பிள்ளை திடீரென இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சேத்தூர் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி மகன் முகேஷ் (வயது23). தொழிலாளி. இவருடைய மனைவி பூபாலா. இவர்களுக்கு திருமணமாகி 42 நாட்கள் தான் ஆகிறது. முகேஷ் தனது நண்பருடன் தளவாய்புரத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றார். தனக்கு சளி, ஜலதோஷம் இருப்பதாக கூறியுள்ளார்.
இதையடுத்து அங்கிருந்த மருத்துவர், ஊசிபோடுமாறு அங்கு பணிபுரியும் செவிலியரிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவர் கையில் நரம்பு ஊசி போட்டுள்ளார். இதையடுத்து சிறிது நேரத்தில் முகேஷ் வாந்தி எடுத்தார். உடனே செவிலியர், முகேஷ் இடுப்பில் மேலும் ஒரு ஊசி போட்டுள்ளார். பின்னர் அவர் மருத்துவமனையை விட்டு வெளியே வந்த சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். பின்னர் அவரை ஆம்புலன்ஸ் மூலமாக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தளவாய்புரம் போலீசில் முகேசின் தந்தை முனியாண்டி புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் வழக்குப்பதிவு செய்து, அந்த மருத்துவமனை மருத்துவர் மற்றும் செவிலியரிடம் விசாரணை நடத்தி வருகிறார். முகேசின் உடல் பிரேத பரிசோதனை செய்து உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. திருமணமான 42 நாட்களில் புதுமாப்பிளை இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.