“ரஷியா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும்!!” – ஜெர்மனி எச்சரிக்கை..
ரஷியாவின் முக்கிய எதிர்க்கட்சியான ‘எதிர்கால ரஷியா’ கட்சியின் தலைவர் அலெக்சி நவல்னி. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் குடித்த ‘டீ’ யில் விஷம் கலந்திருக்கலாம் என்று அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டினார்.
இந்த விவகாரம் ரஷியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சூழலில் அலெக்சி நவல்னி தற்போது ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அலெக்சி நவல்னிக்கு என்ன நடந்தது என்பது குறித்து வெளிப்படையான மற்றும் சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என ரஷியாவை ஜெர்மனி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ரஷியா மீதான தனது நெருக்கடியை ஜெர்மனி மேலும் அதிகரித்துள்ளது. இதுகுறித்து ஜெர்மனி வெளியுறவுத்துறை மந்திரி ஹெய்க்கோ மாஸ் கூறியதாவது:-
நவல்னி மீது நச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக நாங்கள் நடத்தி வரும் விசாரணையில், ரஷியா தனது பங்களிப்பை அளிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். அவ்வாறு ரஷியா ஒத்துழைக்கத் தவறினால், அந்த நாட்டுடன் மேற்கொண்டுள்ள ‘நார்ட் ஸ்ட்ரீம் 2’ கடலடி குழாய் திட்டத்தை நாங்கள் கைவிட வேண்டியிருக்கும். அந்த திட்டம் தொடர்பான எங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளும் நிலைக்கு ரஷியா எங்களை கொண்டு செல்லாது என்று நம்புகிறேன். நவல்னி விவகாரத்தில் நாங்கள் விரைவில் தொடங்கவிருக்கும் விசாரணைக்கு ரஷியா ஒத்துழைப்பு அளிக்காவிட்டால், கடலடி குழாய் திட்டத்தில் தொடர்புடைய மற்ற நாடுகளுடன் இதுதொடர்பாக நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருக்கும். அதுமட்டுமின்றி ரஷியா மீது பொருளாதார தடைகளை விதிப்பது குறித்தும் நாங்கள் ஆலோசிக்க வேண்டி இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.