பாகிஸ்தான் எல்லையில் கூட இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள் ; கொந்தளித்த எம்பி

விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக அரசாங்கம் அகழிகளை தோண்டி வைத்திருப்பதும், அடிப்படை வசதிகளை தடை செய்திருப்பதும் மனித உரிமை மீறல் என பகுஜன் சமாஜ் கட்சி எம்பி தெரிவித்தார்.
இந்தியாவில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லி எல்லைகளில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசு தினத்தன்று நடந்த டிராக்டர் பேரணியின்போது வன்முறை ஏற்பட்டதையடுத்து, போராட்டம் நடைபெறும் எல்லைகளில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். பேரிகார்டுகளை கொண்டு மிகப்பெரிய அரண்களை ஏற்படுத்தியுள்ளனர். அத்துடன், இன்டர்நெட் சேவை, மின்சாரம், கழிப்பிட வசதிகளையும் தடை செய்துள்ளனர்.
இந்நிலையில் விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக மாநிலங்களவையில் இன்றும் விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பகுஜன் சமாஜ் கட்சி எம்பி சதீஷ் மிஷ்ரா பேசியதாவது:-
விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக நீங்கள் (அரசு) அகழிகளை தோண்டி வைத்திருக்கிறீர்கள். இதை நீங்கள் அவர்களுக்காக தோண்டவில்லை, உங்களுக்காக தோண்டியிருக்கிறீர்கள். அங்கே பெண்களும் இருக்கிறார்கள் என்று நினைக்காமல், தண்ணீர், மின்சாரம் மற்றும் கழிப்பிட வசதிகளை அகற்றியிருக்கிறீர்கள். இது மனித உரிமை மீறல் ஆகும்.
போராட்டக் களங்களின் அருகே சாலையில் ஆணிகள் பதிக்கப்பட்டுள்ளன. டெல்லி எல்லையில் செய்வது போல பாகிஸ்தான் எல்லையில் கூட அரசு இந்த வகையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்காது என்று நினைக்கிறேன். நமக்கு உணவு வழங்குபவர்கள் தேசத்தின் எதிரி என்று அழைக்கப்படுகிறார்கள். எனவே, ஈகோவைத் தவிர்த்து, மூன்று சட்டங்களையும் ரத்து செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.