ஊரடங்கு காலத்தில், 1.78 கோடி டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டது – இந்தியன் ரயில்வே தகவல்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் போது, 1,78,70,644 டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டதாக இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.
‘கொரோனா வைரஸ்’ பரவாமல் தடுக்க, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை ஒட்டி, மார்ச், 25ல் இருந்து நாடு முழுவதும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. முன்பதிவு செய்தவர்களுக்கு டிக்கெட் பணம் திருப்பி அளிக்கப்பட்டது. இதுகுறித்து ம.பி., மாநிலத்தை சேர்ந்த சேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்டிருந்தார்.
அதற்கு இந்தியன் ரயில்வே அளித்துள்ள பதில்: மார்ச் 25 முதல், தற்போது வரை 1 கோடியே 78 லட்சத்து 70 ஆயிரத்து 644 டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. முன்பதிவு செய்தவர்களுக்கு ரூ.2,727 கோடி திரும்ப வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் ஆக., 11ம் தேதி வரை, ரூ.3660.08 கோடி திரும்ப வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் ரூ.17,309.1 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டில், ஏப்ரல் மாதம் ரூ.4,345 கோடி, மே மாதம் ரூ.4,463 கோடி, ஜூன் மாதம் ரூ.4,589 கோடி வருமானம் வந்துள்ளது. ஆனால், நடப்பு ஆண்டில் ஏப்ரல் மாதம் வருமானம் ரூ.531.12 கோடி, மே மாதம் ரூ.145.24 கோடி, ஜூன் மாதம் ரூ.390.6 கோடி என வருமானம் குறைந்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.