வீடு புகுந்து இளம்பெண் மற்றும் தாயை எரித்துக் கொலை செய்து தானும் தீகுளித்த இளைஞர்..?

சென்னை கொருக்குப்பேட்டையில் வீட்டுக்குள் புகுந்து, மாநகராட்சி பெண் ஊழியர், அவரது தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த இளைஞர், தன் உடலிலும் பெட்ரோலை ஊற்றி தற்கொலை செய்துகொண்டார். காதல் ஏமாற்றத்தால் நடந்த இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை கொருக்குப்பேட்டை அனந்தநாயகி நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் வெங்கடம்மா (45). இவரது மகள் ரஜிதா (26). வெங்கடம்மாவின் கணவர் வெங்கடேசலு, சென்னை மாநகராட்சியில் வேலை செய்து வந்தபோது உடல்நலக் குறைவால் காலமாகிவிட்டார். 

அதே பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (31). இவர் மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணி செய்து வந்துள்ளார். இவரும் ரஜிதாவும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது காதலுக்கு வெங்கடம்மா எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். அதனால், திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

இதற்கிடையில், தந்தை இறந்துவிட்டதால் ரஜிதாவுக்கு கருணை அடிப்படையில் சென்னை மாநகராட்சியில் (தண்டையார்பேட்டை) அலுவலக உதவியாளராக பணி கிடைத்துள்ளது. இதன்பிறகு, சதீஷ் உடனான பழக்கத்தை ரஜிதா படிப்படியாக குறைத்துக் கொண்டுள்ளார். அவரது நடவடிக்கை பிடிக்காததால், சந்திப்பதையும் ரஜிதா தவிர்த்து வந்துள்ளார். 

இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் பணியாற்றி வரும் மயிலாப்பூரை சேர்ந்த இளைஞருடன் ரஜிதாவுக்கு கடந்த மாதம் 17-ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதை கேள்விப்பட்ட சதீஷ் வேதனை அடைந்துள்ளார். ரஜிதா மீது கடும் கோபத்திலும் இருந்ததாக தெரிகிறது. 

இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணி அளவில் ரஜிதாவின் வீட்டு ஓடுகளை பிரித்து பெட்ரோல் கேனுடன் உள்ளே குதித்துள்ளார் சதீஷ். சத்தம் கேட்டு ரஜிதாவும், அவரது தாயும் பதறிப்போய் எழுந்தனர். வீட்டுக்குள் சதீஷ் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 

அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சதீஷ், ஒரு கட்டத்தில் கேனில் இருந்த பெட்ரோலை ரஜிதா மீது ஊற்றியுள்ளார். தடுக்க வந்த அவரது தாய் மீதும் ஊற்றி தீ வைத்துள்ளார். பின்னர் தன் மீதும் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு பற்றவைத்துக் கொண்டுள்ளார். 

உடல் முழுவதும் தீ பரவிய நிலையில் அவர்களது அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் திரண்டனர். இதுகுறித்து உடனே தீயணைப்பு படைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். அதற்குள் உடல் கருகிய நிலையில் ரஜிதா, அவரது தாய் வெங்கடம்மா, சதீஷ் ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர். ஆர்.கே.நகர் போலீஸார் வந்து 3 பேரின் சடலங்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். 

காதலி மற்றும் அவரது தாயை உயிரோடு கொளுத்திவிட்டு, காதலனும் அவர்களுடன் சேர்ந்து தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x