ஒரே வருடத்தில் 8 பேரை திருமணம் செய்து பல லட்ச நகை, பணத்துடன் எஸ்கேப் ஆன கல்யாண ராணி!

ஒரே ஆண்டில் 8 முதியவர்களை திருமணம் செய்து பல லட்ச ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணத்துடன் பெண் ஒருவர். தப்பிச்சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஜுகல் கிஷோர் என்ற முதியவரது மனைவி கடந்த ஆண்டு உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து, தனிமையில் வாடிய அவர் மற்றொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார். அதனை அடுத்து, டெல்லியை சேர்ந்த திருமண தகவல் மையமான கண்ணா விவாஹ் கேந்திராவின் விளம்பரத்தைப் பார்த்து பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார்.
ஆனால், அந்த பெண், திருமணமான சில மாதங்களிலேயே ஜுகல் கிஷோரிடம் இருந்த பணம் மற்றும் நகைகளை எடுத்துக்கொண்டு காணாமல் போயுள்ளார். அதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த ஜுகல் கிஷோர் உடனடியாக அந்த திருமண தகவல் மையத்தை அணுகி அந்த பெண் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
அப்போது அந்த பெண்ணால் பாதிக்கப்பட்ட மற்றொரு நபரும் கிஷோருக்கு அறிமுகமாகியுள்ளார். அதனை அடுத்து, இதுகுறித்து இருவரும் இணைந்து அப்பகுதி காவல்துறையினரிடம் புகாரளித்துள்ளனர். அவர்களின் புகாரின் அடிப்படையில் விசாரணையில் ஈடுபட்ட காவலர்கள், பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
அந்த பெண், கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 8 முதியவர்களை திருமணம் செய்துகொண்டு இதுபோன்று ஏமாற்றியதாகவும் அனைத்து திருமணங்களுமே கண்ணா விவாஹ் கேந்திரா மூலம் நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து, முதியவர்களை ஏமாற்றிய பெண், அவரின் குடும்பத்தினர் மற்றும் கண்ணா விவாஹ் கேந்திராவின் நிறுவனர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.