குடும்ப அட்டைதாரர்களின் பொங்கல் பரிசு தொகையில் ரூ.50 லட்சம் மோசடி..? 3 பேர் மீது வழக்கு
குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக அரசு கொடுத்த பணத்தில் ரூ.50 லட்சம் செய்ததாக கூட்டுறவு சங்க அதிகாரிகள் 3 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் பணம், கரும்பு, சர்க்கரை போன்ற பொருட்கள் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகின்றன. கிருஷ்ணகிரியில் 2019-ம் ஆண்டு வழங்க ஒரு கோடியே 98 லட்சம் ரூபாய் பணத்தை தமிழக அரசு ஒதுக்கியது.
அதில், பொருட்கள் வாங்கியதுபோக மீதம் ரூ.51 லட்சம் இருந்துள்ளது. இந்த பணத்தை கூட்டுறவு சங்க அதிகாரிகள் செய்து எடுத்துக் கொண்டதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதில், கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு சங்க இணை பதிவாளர் பிரபாகரன், வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சந்தைப்படுத்தல் சங்கங்களின் நிர்வாக இயக்குநர் (பொறுப்பு) மோகன், பொதுமேலாளர் மகேஷ்வரி ஆகியோர் அரசு பணத்தை கையாடல் செய்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்தன. அதைத் தொடர்ந்து 3 பேர் மீதும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 3 பேரின் வீடுகளிலும் போலீஸார் சோதனை நடத்தினர்.
அரசு பணத்தை கையாடல் செய்வதற்காக 17 விவசாயிகளிடம் இருந்து ரூ.51.3 லட்சத்துக்கு கரும்புகள் வாங்கியதாக போலியான விற்பனை ரசீதுகள் தயார் செய்து தாக்கல் செய்துள்ளனர். பின்னர் 2019-ம் ஆண்டு ஜுன் 26 முதல் ஜுலை 16 வரை 10 காசோலைகள் மூலம் ரூ.50 லட்சம் பணத்தை மோகன் பெற்றுள்ளார். பிரபாகரன், மோகன், மகேஷ்வரி ஆகிய 3 பேரும் சேர்ந்து இந்தபணத்தை கையாடல் செய்துள்ளனர் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கிருஷ்ணகிரியில் உள்ள முதன்மை வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் நியாயவிலைக் கடைகளில் 48 விற்பனையாளர்களை நியமிப்பதில் பிரபாகரனும், மோகனும் முறைகேடுகளைச் செய்துள்ளனர் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.