‘கர்நாடகாவில் இனி ஊரடங்கு கிடையாது’

கர்நாடக மாநிலத்தில் இன்று முதல் முழு ஊரடங்கு நீக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் திரு. எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்தும் நோக்குடன் பெங்களூரு உட்பட சில இடங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் நேற்று, பெங்களூரில் செய்தியாளர்களிடம் முதலமைச்சர் எடியூரப்பா கூறியதாவது:
கர்நாடக மாநிலத்தில் இன்று முதல் முழு ஊரடங்கு நீக்கப்படுகிறது. கொரோனாவை தடுக்க ஊரடங்கு மட்டுமே கைகொடுக்காது. மத்திய அரசு வழிகாட்டுதலின்படி கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும்.
பொருளாதாரம் நலிவடைந்துள்ளதால் மக்கள் இன்று முதல் வழக்கம்போல் வேலைக்கு செல்ல வேண்டும். மேலும் சீரான பொருளாதாரத்தை நிலைநாட்டிக் கொண்டே கொரோனாவுக்கு எதிராக நாம் போராட வேண்டும். நோய் பாதிப்புள்ள இடங்கள் மட்டும் தனிமைப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.