கோவிலுக்கு வந்த காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற இந்து அமைப்பினர் கைது..
காதலர் தினத்தை முன்னிட்டு, கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் வளாகத்தைச் சுற்றியுள்ள பூங்காவுக்கு ஏராளமான காதலர் கள் வந்து, காதலர் தினத்தைக் கொண்டாடுவது வழக்கம். ஆனால், மேற்கத்திய கலாச்சாரம் என்ற பெயரில் இந்தியக் கலாச்சாரத்தையும், பண்பாட் டையும் சீரழிப்பதாகக் கூறி, காதலர் தினத்துக்கு சில ஆன்மிக, இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், காதலர் தினமான நேற்று இந்து மக்கள் கட்சியின் அனுமன் சேனா மாநிலச் செயலாளர் கா.பாலா தலைமையில், சிவசேனா, இந்து மகா சபா, ராம் சேனா, மாவீரன் மஞ்சள் படை, இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், தாராசுரம் கோயில் பகுதிக்கு வந்திருந்த காதல் ஜோடிகளுக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்கும் முயற்சியில், பூ, தேங்காய், வெற்றிலைப் பாக்கு, தாலிக்கயிறு உள்ளிட்ட மங்கலப் பொருட்களுடன் மேளம், நாதஸ்வரம் ஒலிக்க ஊர்வலமாக வந்தனர்.
அவர்களை கோயில் வாயிலில் பாதுகாப்புப் பணியில் இருந்த தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால், போலீஸாருக்கும், இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர் களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, இந்து அமைப்புகளைச் சேர்ந்த 20 பேரை போலீஸார் கைது செய்தனர்.