ரூ.10 லட்சத்தை அபேஸ் செய்த 10 வயது சிறுவன்!

மத்தியபிரதேசத்தில், வங்கியில் நுழைந்த 10 வயது சிறுவன், 10 லட்சம் ரூபாயை திருடி சென்ற சம்பவம் நடந்துள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம் நீமுஜ் மாவட்டத்தில் உள்ள ஜாவத் பகுதியில், கூட்டுறவு வங்கி உள்ளது. இங்கு, பகல் 11 மணியளவில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த போது, வங்கி கேஷியர் அறைக்குள் இருந்த ரூ.10 லட்சம் காணாமல் போனது. இதனால், அதிர்ச்சியைடைந்த வங்கி நிர்வாகிகள், சிசிடிவி கேமராவை ஆராய்ந்ததில், சிறுவன் ஒருவன் கைவரிசையை காட்டியது தெரியவந்தது.

கேஷியர் கவுன்டர் முன்பாக வாடிக்கையாளர்கள் வரிசையில் காத்திருந்த நிலையில், வங்கி கேஷியர் தனது கேபின் அறையை பூட்டாமல் பக்கத்து அறைக்கு சென்றுள்ளார். அப்போது 10 வயதுள்ள சிறுவன் ஒருவன் விறுவிறுவென கேஷியர் கேபின் அறைக்குள் சென்று, இரண்டு 500 ரூபாய் நோட்டு கட்டுகளை எடுத்து, தான் வைத்திருந்த பையினுள் போட்டுக்கொண்டு, மின்னல் வேகத்தில் மறைந்தான். இவை அனைத்தும் 30 நொடிகளில் அரங்கேறியுள்ளது.

அச்சிறுவன் கேஷியர் டேபிளின் உயரம் கூட இல்லாததால், வரிசையில் நின்ற யாரும் கவனிக்கவில்லை. இச்சம்பவத்திற்கு முன்பாக கிட்டத்தட்ட 30 நிமிடங்களுக்கு முன்பாக 20 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன், வங்கிக்குள் வந்து ஓரமாக காத்திருந்துள்ளான். சுற்றும் முற்றும் நோட்டமிட்டுக் கொண்டிருந்த அவன், கேஷியர் அறையை விட்டு கிளம்பியதும், வெளியே நின்ற அச்சிறுவனுக்கு ‛சிக்னல்’ கொடுத்ததும் சிசிடிவி.,யில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் மத்தியபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x