கேரள கன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் கைதான பாதிரியாரின் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!!!

தலைமை நீதிபதி பாப்டே மற்றும் நீதிபதிகள் போபண்ணா, ராமசுப்ரமணியன் கொண்ட அமர்வு, கன்னியாஸ்திரி தாக்கல் செய்த பாலியல் பலாத்கார வழக்கிலிருந்து விடுவிக்கும்படி பாதிரியார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ததோடு மட்டுமல்லாமல் அவரை விசாரணைக்கு உட்படுத்துமாறு உச்ச நீதிமன்றம் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி அவர் அளித்த மனுவை ஜூலை 7’ம் தேதி கேரள உயர் நீதிமன்றம் நிராகரித்தது. மேலும் பிஷப் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஜலந்தர் மறைமாவட்ட பாதிரியாரை கற்பழிப்பு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு உயர் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
பாலியல் பலாத்கார வழக்கில் முல்லக்கலுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருப்பதாக கூறிய அரசு தரப்பு வாதத்தை ஒப்புக் கொண்டு பாதிரியாரின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பிஷப் மீதான கற்பழிப்பு வழக்கு கோட்டயம் மாவட்டத்தில் போலீசாரால் பதிவு செய்யப்பட்டது. தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்த ஆரம்ப விசாரணையைத் தொடங்குவதற்கு சற்று முன்னதாக பிஷப் விசாரணை நீதிமன்றத்தில் வழக்கிலிருந்து விடுவிக்கும் மனுவை தாக்கல் செய்திருந்தார். உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியின் நிதி நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பிய பாதிரியார், தன் மீது பொய்யாக குற்றம் சாட்டியதாக வாதிட்டார்.
முன்னதாக 2018 ஜூன் மாதம் காவல்துறைக்கு கன்னியாஸ்திரி அளித்த புகாரில், 2014 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் பிஷப்பால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டியிருந்தார்.