மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போன்; முகேஷ் அம்பானி தகவல்

கூகுளுடன் இணைந்து, 4ஜி அல்லது 5ஜி ஸ்மார்ட்போன்களை தற்போது இருக்கும் விலையை விட பல மடங்கு குறைந்த விலையில் தயாரிக்க உள்ளதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக் கூட்டம். கொரோனா பரவலால் 43-வது பொதுக் கூட்டம் இணைய வழியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய அறிவிப்புகளை நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி வெளியிட்டுள்ளார். குறிப்பாக ஜியோவில் பேஸ்புக் நிறுவனத்தை தொடர்ந்து கூகுளும் பெரிய தொகையை முதலீடு செய்திருப்பதாக தெரிவித்தார்.
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் இயங்குதளத்தை தயாரிக்க கூகுள் – ஜியோ ஒப்பந்தம் போட்டுள்ளன. இதற்காக ஜியோவின் 7.7% பங்குகளை ரூ.33,737 கோடிக்கு வாங்கியுள்ளது. இந்திய பயனர்களுக்கு தொடக்க நிலை ஸ்மார்ட்போன்களை இந்த கூட்டணி உருவாக்கும். தற்போது இருக்கும் 4ஜி அல்லது 5ஜி ஸ்மார்ட்போன்களின் விலையில் ஒரு பங்கு தான் அவை இருக்கும் என கூறியுள்ளார். ஜியோ 5ஜி சேவைக்கு தயாராகிவிட்டதாகவும், அலைக்கற்றை கிடைத்தவுடன் 5ஜி சோதனை தொடங்கும் என்றார்.
அதே போல் ஜியோ – பேஸ்புக் கூட்டணியானது அதன் இ-காமர்ஸ் தயாரிப்பான ஜியோ மார்ட்டுக்கு வாட்ஸப்பை பயன்படுத்தும். விழாவில் ஓடிடி தளமான (இணைய வழி திரைப்படங்கள், தொடர்கள்) ஜியோ டிவி+ அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி, மகன் ஆகாஷ் அம்பானி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.