செப்டம்பர் 1ம் தேதி முதல் நூலகங்களைத் திறக்க உத்தரவிட்ட தமிழக அரசு!

தமிழகத்தில் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் நூலகங்களைத் திறக்க தலைமைச் செயலாளா் கே.சண்முகம் உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட உத்தரவில், ‘தமிழகத்தில் கன்னிமாரா, அண்ணா நூற்றாண்டு நூலகம், மாவட்ட மைய நூலகங்கள் உள்பட மொத்தம் 4 ஆயிரத்து 638 நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நூலகங்களைத் திறப்பது குறித்து பொது நூலகங்கள் இயக்குநா் அரசுக்குக் கோரிக்கை வைத்திருந்தார்கள்.
அதன்படி, கன்னிமாரா, அண்ணா நூற்றாண்டு நூலகம், மாவட்ட மைய நூலகங்கள், முழுநேர கிளை நூலகங்கள் என அனைத்து நூலகங்களையும் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது இந்த நூலகங்களில் புத்தகங்களைப் பெறுவது, குறிப்புகளை எடுப்பது, புத்தகங்களை எடுத்து வந்து படிப்பது போன்றவற்றை மேற்கொள்ளலாம்.
கிளை மற்றும் கிராமப்புற நூலகங்களில் புத்தகங்களைக் கையெழுத்திட்டு பெறும் பணியை மட்டும் மேற்கொள்ளலாம். அனைத்து நூலகங்களும் வேலை நாள்களில் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படும் என்று கூறியுள்ளார்.
மேலும் பல வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. அவை, *65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அரசு பொது நூலகங்களுக்கு வர அனுமதி இல்லை.
*காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
*பகுதி நேர நூலகங்களை திறக்க அனுமதியில்லை.
*அனைத்து நூலகங்களிலும் நாளிதழ்கள் பிரிவுக்கு அனுமதியில்லை.
*நூலகர்கள் / நூலக பணியாளர்கள் முக கவசம் மற்றும் கையுறை அணிவது அவசியம்.
*வாசகர்கள் கேட்கும் நூல்களை நூலடுக்குகளில் இருந்து நூலக பணியாளர்கள் தான் எடுத்து கொடுக்க வேண்டும்.
*15 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் , 65 வயது மேல் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு நூலகத்தின் உள் அனுமதி இல்லை.’ இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.