அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் அரசியலில் ஈடுபட தடை – ஐகோர்ட்டு உத்தரவு

கேரளாவில் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் அரசியலில் ஈடுபட தடை விதித்து அம்மாநில ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் தேர்தலில் போட்டியிடுவதுடன், பிரசாரங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனை எதிர்த்து ஜிபு தாமஸ் என்பவர் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அதில், “அரசு பள்ளிகளில் பணிபுரியும்ஆசிரியர்கள் அரசியலில் ஈடுபட தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள், தேர்தலில் போட்டியிடுவது மற்றும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்கு தடையில்லை.
இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. எனவே அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் அரசியலில் ஈடுபட தடை விதிக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.
அந்த மனு தலைமை நீதிபதி மணிகுமார் தலைமையில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பிறகு நீதிபதி வழங்கிய தீர்ப்பில், “அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது. மேலும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் அரசியலில் ஈடுபட அனுமதி அளித்தது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது’’ என்று கூறியுள்ளார்.