நிவர் புயல் பாதிப்பின் காரணமாக தமிழகத்தில் மேலும் 21 ரயில்களின் சேவை ரத்து!

நிவர் புயல் பாதிப்பின் காரணமாக தமிழகத்தில் மேலும் 21 ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக 7 மாவட்டங்களில் பேருந்து மற்றும் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. மேலும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில் சேவைகளும் நேற்று ரத்து செய்யப்பட்டன.
இதனிடையே நிவர் புயலையொட்டி நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில் தண்டவாளப் பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் நடைபெற்றன. ஒருவேளை புயலால் பாதிப்பு ஏற்பட்டால் உடனே சரிசெய்யவும் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் மேலும் 21 ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி இன்று(நவ.26) சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு செல்லும் 6 ரயில்களின் சேவை இருமார்க்கமாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் சென்னை சென்ட்ரல்- பெங்களூரு இடையேயான 4 ரயில்களின் சேவையும், சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி செல்லும் 2 ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதேபோல் சென்னை சென்ட்ரல்- மங்களூரு இடையேயான ரயில் சேவையும், காரைக்குடி- சென்னை, மதுரை- சென்னை, திருச்சி- சென்னை இடையேயான ரயில் சேவைகளும் இன்று இருமார்க்கமும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் இருந்து டெல்லி செல்லும் நிஜாமுதீன் ரயில், இருமார்க்கமும் ரத்து செய்யப்பட்டுள்ளது .
ரத்து செய்யப்பட்ட ரயிலில் பயணம் செய்வதற்காக முன்பதிவு செய்தவர்களுக்கான கட்டணங்கள் திருப்பி அளிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே குறிப்பிட்டுள்ளது.