’15 நாட்களில் 10 சதவீத மக்களுக்கு பரிசோதனை செய்யப்படும்’
இன்னும் 15 நாட்களில் சென்னையில் உள்ள 10 சதவீதம் மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் தனியார் பரிசோதனை மைய பிரதிநிதிகளுடன் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆலோசனை மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
ஜூன் 19ம் தேதி நாள் ஒன்றுக்கு 4,500 பரிசோதனைகள் வரை செய்யப்பட்ட நிலையில் தற்போது கிட்டத்தட்ட 14,000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சென்னையில் தற்போது வரை சுமார் 5 லட்சத்து 70 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்னும் 15 நாட்களில் சென்னையில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 10% சதவீத மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து முடிக்கப்படும்.
வணிக நிறுவனங்களில் கூட்டம் கூடும்போது அரசு வழிகாட்டுதல்களை பின்பற்றாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் சாதாரண முகக்கவசத்தை அணிந்தால் போதுமானது .
ரஜினிகாந்த் கேளம்பாக்கம் சென்று வந்தது தொடர்பாக, அவசியமெனில் அது குறித்து ஆய்வு செய்து விளக்கம் அளிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.