கள்ளக்குறிச்சி மாவட்டம் குலதீபமஙகலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவர் தன்னுடைய பழுதான காரை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் அதே பகுதியை சேர்ந்த அய்யனார் மகள் வனிதா(3) மற்றும் ஏழுமலை மகள் ராஜி(7) ஆகிய இரண்டு பெண் குழந்தைகளும் விளையாடிக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ராஜாவின் காருக்குள் சென்று விளையாடியுள்ளனர்.
ஆனால் சுமார் 2 மணி நேரமாகியும், அவர்கள் வீடு திரும்பவில்லை. இதன்பிறகுதான் பெற்றோர் தேட ஆரம்பித்துள்ளனர்.

வீட்டின் அருகே நின்ற காருக்குள் பார்த்தபோது, இரு குழந்தைகளும் மயங்கிய நிலையில் இருந்தனர். இரண்டு குழந்தைகளை மீட்டு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் அந்த குழந்தைகள் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

காரின் உள்ளே விளையாடியபோது சைல்ட் லாக் காரணமாக, கார் கதவு தானாக மூடி, காற்று இல்லாமல், பரிதாபமாக அந்த குழந்தைகள் பலியாகியிருக்கலாம் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.
கார் சாவிகளை குழந்தைகளிடம் கொடுப்பதை பெற்றோர் தவிர்க்க வேண்டும்; குழந்தைகளை கார்களுக்குள் ஏறி விளையாட அனுமதிக்க கூடாது என்று குழந்தைகள் நல மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
