ஊரடங்கு தொடர்பில் பொதுமக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவாரா பழனிச்சாமி?

கொரோனாவை கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரால், அரசு அறிவித்துள்ள பொது முடக்கத்தால், பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதித்துள்ளது. நான்கு மாதங்களுக்கும் மேலாக பேருந்து, ரயில் போக்குவரத்து இயக்கப்படவில்லை. பல்வேறு தொழில்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை, அரசு நேரக் குறைப்பு அறிவித்துள்ளதால் நிறுவனங்கள் ஆள் குறைப்பு செய்து வருகின்றன. இதனால் லட்சக்கணக்கானோர் வேலையிழந்து தவித்து வருகின்றனர்
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பொதுமுடக்கம் ஜூலை 31ஆம் தேதி வரை அமலில் உள்ள நிலையில், புதிய மாதம் பிறந்தாலாவது தங்கள் வாழ்வாதாரத்துக்கு வழி பிறக்குமா என மக்கள் எதிர்பார்த்துள்ளனர். பொது முடக்கம் செய்வதன் மூலம், கொரோனா பரவலை தடுக்க முடியாது என்பதே மருத்துவ வல்லுனர்களின் கருத்து. ஆனாலும், தமிழக அரசு பொதுமுடக்கத்தை நீட்டிப்பு செய்வதில் தீவிர முனைப்பு காட்டி வருகிறது. இதற்கு, மருந்துதெளிப்பு, நோயாளிகள் பராமரிப்பு, டெஸ்டிங் போன்றவற்றில் கல்லா கட்டி வரும் கமிஷன் அரசியல் வாதிகள் மற்றும் அதிகாரிகளின் அழுத்தமே முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று ஆகஸ்ட் மாத ஊரடங்கு தொடர்பாக, முதல்வர் பழனிச்சாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இதிலும், வழக்கம்போலவே, ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு பிறகும் தமிழ்நாட்டில் பேருந்து, ரயில்கள் இயங்காது என்ற முடிவே எடுக்கப்படும் என தகவலே வெளியாகியுள்ளது. ஏற்கனவே, அநியாய மின்கட்டணம் வசூலித்து, எடப்பாடி அரசு கருணையின்றி நடந்து கொள்வதாக பொதுமக்கள் அதிருப்தியில் உள்ள நிலையில், ஊடரங்கை முற்றிலும் தளர்த்தி, எடப்பாடி பொதுமக்களின் நலனில் அக்கறை கொள்வாரா அல்லது கமிஷன் அதிகாரிகளுக்கு துணைபோவாரா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.