‘இனி நம்மள அசைச்சுக்க முடியாது’ வடகொரியா அதிபர் புளங்காகிதம்

அணு ஆயுதம் பலம் பொருந்திய நாடாக வடகொரியா உள்ளதால் இனி நம்மை தாக்கும் தைரியம் யாருக்கும் இருக்காது என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி, அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தினார். வடகொரியா மீது அமெரிக்கா பல பொருளாதார தடைகளை விதித்தது. அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் கிம் ஜாங் உன் இடையேயான பேச்சுவார்த்தைகள் நடந்தும் பலனளிக்காமல் போனது. தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை, நடத்தத் தொடங்கியது வடகொரியா.
இந்நிலையில் தென்கொரியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதன் 67-வது ஆண்டு தினத்தையொட்டி போரில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் மத்தியில் அதிபர் கிம் ஜாங் உன் பேசியது, எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளவே வடகொரியா அணு ஆயுதங்களை தயாரிக்கிறது. தற்போது அணு ஆயுத சக்தியில் பலம் பொருந்திய நாடாக வடகொரியா உள்ளது. நாட்டின் பாதுகாப்பும், எதிர்காலமும் உறுதி செய்யப்பட்டுள்ளதால் இனி இந்த மண்ணில் போர் இருக்காது. நம்மை யாரும் தாக்கமுடியாது.
இவ்வாறு கிம் ஜாங் உன் பேசினார்.