‘ரொம்ப மனஅழுத்தம் வருது’ 43 சதவீத இந்தியர்கள் புலம்பல்

இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், 43 சதவீத இந்தியர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் ஆய்வு நிறுவனம் ஒன்று, 10,000க்கும் மேற்பட்ட இந்தியர்களிடம் இதுதொடர்பாக ஆய்வு நடத்தியது. அதில் பதிலளித்தவர்களில் 26 சதவீதம் பேர் லேசான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 11 சதவீதம் பேர் மிதமான மன அழுத்தத்துக்கும், ஆறு சதவீதம் பேர் கடுமையாக மன அழுத்த அறிகுறிகளையும் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அந்த ஆய்வறிக்கையில், “தொடர் ஊரடங்கு, பதற்றம், வேலையிழப்பு, மற்றும் நிலைத்தன்மையற்ற சூழலால், மன அழுத்தம் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. அதிகளவு மன அழுத்தம் மனச்சோர்வுக்கு வழிவகுக்கும். தற்போதைய ஊரடங்கு மற்றும் வாழ்க்கை முறை வெகுவாக மாறி வருவதால், 43 சதவீத இந்தியர்கள் தற்போது மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மன அழுத்தத்தின் விளைவுகளாக, குறைந்த ஆர்வம் , நம்பிக்கையற்ற உணர்வு, ஒழுங்கற்ற தூக்க சுழற்சிகளைக் கையாளுதல், மோசமான உணவுப் பழக்கம், குறைந்த அளவு ஆற்றல், குறைந்த சுயமரியாதை, கவனம் செலுத்துவதில் சிக்கல், அமைதியற்றவர்களாவும், தங்களுக்கே தீங்கு விளைவிக்கும் எண்ணங்களுடன் உள்ளனர். ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.