10 ரயில் இன்ஜின்களை வங்கதேசத்துக்கு அனுப்பிய மத்திய அரசு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதார நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, பக்கத்து நாடுகளுடனான வர்த்தகத்தை ஊக்குவிக்க, முன்னுரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
குறிப்பாக, இந்தியா – வங்கதேசம் இடையே வர்த்தகத்தை ஊக்குவிக்கவும், புதிய விநியோக சங்கிலியை உருவாக்கவும், உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை அதிகரிக்கவும் இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக வங்கதேசத்துக்கு 10 பிராட்கேஜ் ரயில் இன்ஜின்களை மத்திய அரசு அனுப்பி வைத்தது. வங்கதேசத்தின் தேவைக்கேற்ப மாற்றியமைக்கப்பட்ட இந்த இன்ஜின்களை மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் கொடியசைத்து அனுப்பி வைத்தனர்.
காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வங்கதேச அமைச்சர்கள் ஏ.கே.அப்துல் மோமன் மற்றும் முகமது நூருல் இஸ்லாம் சுஜன் பங்கேற்றனர்.
மேற்கு வங்கத்தின் கொல்கத்தா மற்றும் திரிபுராவின் அகர்தலா இடையே இந்தியா மற்றும் வங்கதேசம் சார்பில் பார்சல் மற்றும் கன்டெய்னர் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தின் சிட்டகாங் துறைமுகம் வழியாக இந்த ரயில் சேவை இயக்கப்படுகிறது.