வைஷ்னோ தேவி கோவிலுக்கு 2200 கி.மீ சைக்கிள் யாத்திரை செல்லும் 68 வயது ஆச்சரிய பாட்டி!!

மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்திலிருந்து சுமார் 2200 கிமீ தூரத்திலுள்ள வைஷ்னோ தேவி கோவிலுக்கு 68 வயது பாட்டி ஒருவர் சைக்கிளிலேயே யாத்திரை மேற்கொண்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாத யாத்திரை செல்பவர்கள் செருப்பு அணியாமல்கூட பல கிலோமீட்டர் தூரம் பல நாட்கள் நடந்து செல்வார்கள். பயணத்திற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் கொண்டுசெல்லும் அவர்கள் தங்கள் உடல்நலத்தைக் குறித்து கவலைப்பட மாட்டார்கள். ஆனால் வயதானவர்கள் யாத்திரை செல்லும்போது தங்கள் உடல்நலத்தைக் காக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது வழக்கம்.
ஆனால் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 68 வயது பெண்மணி ஒருவர் அதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்ற கவலை இல்லாமல் ஒரு பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.
டிவிட்டர் பயனர் ஒருவர் இந்த பெண்மணியின் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் இந்த பாட்டி புல்தானா மாவட்டத்திலிருந்து வைஷ்னோ தேவி வரை சுமார் 2200 கிமீ தூரம் கியர் சைக்கிளிலேயே செல்வதாகக் குறிப்பிட்டிருக்கிறார். இந்த வீடியோ 1.59 லட்சம் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.
இந்த பெண்மணியின் தைரியத்தை பலரும் பாராட்டி வரும் நிலையில், அவரது உறவினர்களும், குடும்பத்தினரும் யாத்திரை செல்ல மாற்று ஏற்பாடு செய்துகொடுத்தால் நன்றாயிருக்கும் என பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.