‘2024இல் தான் விமான போக்குவரத்து இயல்புக்கு வரும்’ IATA தகவல்

உலக அளவில் 2024ஆம் ஆண்டில் தான் விமானப் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பும் என சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் ( IATA) தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து பல்வேறு நாடுகள் பொதுமுடக்கத்தை அறிவித்து செயல்படுத்தி வருகின்றன. வைரஸ் பரவலைத்தடுக்கும் விதமாக சர்வதேச அளவில் விமானப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சர்வதேச அளவில் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்போது இந்தியாவைப் பொறுத்தவரையில் கட்டுப்பாடுகளுடன் உள்நாட்டு விமானப் போக்குவரத்து குறைந்த அளவில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம், உலக அளவில் விமானப் போக்குவரத்தானது 2024ஆம் ஆண்டில் தான் இயல்பு நிலைக்குத் திரும்பும் எனத் தெரிவித்துள்ளது.
தற்போதைய கணிப்பின்படி கரோனா பொதுமுடத்தால் 2020ஆம் ஆண்டில் 55 சதவிகிதத்திலான விமானப் போக்குவரத்து சேவை பாதிப்படையும் என இந்த அமைப்பு கணித்துள்ளது. இதற்கு முன்னர் ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்ட கணிப்பில், 46 சதவீத விமான போக்குவரத்து சேவையே பாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.