பீர் குடித்த போதையில் குழந்தையின் இறப்புக்கு காரணமான தாய் விடுதலை!

வயிறு முட்ட பீரை குடித்த தாய் போதையில் தனது 4 மாத கைக்குழந்தைக்கு அருகே படுத்து புரண்டுள்ளார். காலையில் எழுந்து பார்த்த போது குழந்தையின் முகம் நீலம் பாரித்த நிலையில் இறந்து கிடந்தது. இவ்வழக்கில் 20 ஆண்டு சிறை தண்டனை பெற்றவரை ஐகோர்ட் விடுதலை செய்தது.
அமெரிக்காவின் மேரிலான்டில் 2013-ல் இச்சம்பவம் நடந்துள்ளது. முரியல் மோரிசன் என்ற பெண்மணிக்கு அப்போது 4 மாத கைக்குழந்தை, 4 வயது மகள் இருந்தனர். ஹாப்பி ஹவர் என்ற பெயரில் நண்பர்களுடன் இணையத்தில் அரட்டை அடித்த படி 700 மில்லி பீரும், அரை லிட்டர் மால்ட் கலந்த மதுவும் அருந்தியுள்ளார்.
இதில் மயக்கமானவர் குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்த படுக்கைக்கு சென்று அருகில் படுத்து உறங்கியுள்ளார். சிறிது நேரத்தில் அவரது கைக்குழந்தை மீது புரண்டு படுத்துள்ளார். மூச்சுத்திணறி குழந்தை கதறியுள்ளது. இதனை கண்ட 4 வயது மகளும் தாயை எழுப்ப முயன்றுள்ளார். ஆனால் போதை தலைக்கேறி கவிழ்ந்து கிடந்துள்ளார் முரியல். இச்சம்பவத்திற்காக இவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து மேரிலான்ட் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில், நான்கு பேர் இவர் வேண்டுமென்றே குழந்தையை கொல்ல வேண்டும் என செயல்படவில்லை. பீர் குடித்துவிட்டு குழந்தையுடன் சேர்ந்து உறங்குவதை உயிருக்கு ஆபத்தானதாக கருத முடியாது என கூறி விடுதலை செய்துள்ளது.
ஒரு நீதிபதி மட்டும் மற்றவர்களிடம் இருந்து மாறுபட்டு மது போதையில் குழந்தையுடன் ஒரே படுக்கையை பகிர்ந்துகொள்வது தீவிரமான அலட்சிய போக்கு என்று கூறியுள்ளார். இருப்பினும் பெரும்பான்மை நீதிபதிகளின் ஒருமித்த தீர்ப்பால் அப்பெண் விடுவிக்கப்பட்டார்.