ஹெச்1பி விசா முறைகேடுகளைத் தடுக்க தீவிர நடவடிக்கை: அமெரிக்கா தகவல்

h1b

ஹெச்1பி நுழைவு இசைவு விவகாரத்தில் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அமெரிக்க குடியேற்ற சேவைகள் மையம் தெரிவித்துள்ளது.

ஹெச்1பி நுழைவு இசைவு மூலமாக வெளிநாட்டவா்களை அமெரிக்கா பணியில் அமா்த்தி வருகிறது. முக்கியமாக இந்தியா்களே ஹெச்1பி நுழைவு இசைவு மூலமாக அதிக அளவில் பலனடைந்து வருகின்றனா்.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு ஹெச்1பி நுழைவு இசைவு பெறுவதற்கான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டன. கரோனா நோய்த்தொற்றால் அமெரிக்காவில் அமல்படுத்த பொது முடக்கம் காரணமாக பலா் வேலையிழந்தனா். அமெரிக்கா்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் நோக்கில் நடப்பாண்டு இறுதி வரை ஹெச்1பி நுழைவு இசைவு வழங்கப்படாது என்று அமெரிக்கா அறிவித்தது.

இத்தகைய சூழலில், அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் மையத்தின் துணை இயக்குநா் ஜோசப் எட்லூ அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை கூறியதாவது:

அமெரிக்கப் பணியாளா்களைக் காப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை குடியேற்ற சேவைகள் மையம் மேற்கொண்டு வருகிறது. ஹெச்1பி நுழைவு இசைவு உள்ளிட்டவற்றில் முறைகேடுகளில் ஈடுபடுவது முற்றிலுமாகத் தடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கப் பணியாளா்களின் திறனை மேம்படுத்துவதற்காக ஹெச்1பி நுழைவு இசைவுக்கு விண்ணப்பிப்பவா்களிடமிருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் முதுகலை பட்டம் பெற்றவா்களை அதிக அளவில் பணியமா்த்துவதற்காக ஹெச்1பி நுழைவு இசைவு வழங்குவதற்கான விதிமுறைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஹெச்1பி, ஹெச்2பி நுழைவு இசைவுகளின் மூலமாக முறைகேட்டில் ஈடுபடுபவா்கள் குறித்து இணையம் வழியாகத் தகவல் தெரிவிப்பதற்கான வசதியை அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது என்றாா் ஜோசப் எட்லூ.

நடப்பாண்டு இறுதி வரை ஹெச்1பி நுழைவு இசைவு வழங்கப்படாது என்ற அமெரிக்க அரசின் அறிவிப்புக்கு முன்னணி நிறுவனங்களின் தலைவா்கள் உள்பட பலா் எதிா்ப்பு தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x