கொரோனா நிதிக்கு ரூ.70 ஆயிரம் அளித்த பிச்சைக்காரர்

பிச்சை எடுத்த பணத்தில், ரூ.70 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவரை, பலரும் பாராட்டினர்.
துாத்துக்குடி மாவட்டம், ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் பூல்பாண்டியன் (65). இவர், திருமணம் முடிந்த சில மாதங்களில், குடும்பத்தை பிரிந்து, மும்பை சென்றார். அங்கு வேலை கிடைக்காததால், பிச்சை எடுத்து வந்தார். பின்னர் ஊர் திரும்பியவரை குடும்பத்தினர் சேர்க்கவில்லை.
இவர் பிச்சை எடுத்து தன்னுடைய செலவு போக மீதமாகும் பணத்தை சேமித்து பத்தாயிரம் பத்தாயிரம் ரூபாயாக மதுரை ஆட்சியரை சந்தித்து கொரோனா நிதியாக அளித்துள்ளார். மே மாதம் முதல் 6 முறை அளித்தவர், நேற்று ஏழாவது முறையாக, 10 ஆயிரம் ரூபாயை, கலெக்டர் வினய்யிடம் வழங்கினார். அவரை பலரும் பாராட்டினர்.
இதற்கு முன்பாக இவர் பிச்சை எடுத்த பணத்தில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பல மாநிலங்களிலுள்ள பள்ளிகளுக்கு, மேஜை, நாற்காலிகள் வாங்க வழங்கினார். மும்பையில், 20 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கியுள்ளார்.