பாஜகவில் இன்று இணைகிறார் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை…!

தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை இன்று பாஜகவில் இணைகிறார்.
கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை. தனக்குப்பிடித்த தலைவர் பிரதமர் மோடிதான் என்று வெளிப்படையாக அறிவித்த அவர், திடீரென ஐ.பி.எஸ் பணியில் இருந்து விலகினார். தமிழக அரசியலில் களமிறங்க திட்டம் என்று அப்போதே கூறப்பட்டாலும், அது தொடர்பாக அவர் எதுவும் விளக்கம் அளிக்கவில்லை.
சில மாதங்களுக்கு முன் தன் சொந்த ஊருக்கு வந்த அண்ணாமலை, கிராமப் புறங்களில் மக்களின் சுயசார்பு பணிகளை மேற்கொள்ள உதவும் பணியில் ஈடுபடப்போவதாகவும், தற்சார்பு விவசாயத்தில் களமிறங்க உள்ளதாகவும் கூறி வந்தார். மேலும், அரசியல் ரீதியாக சில பேட்டிகளையும் அளித்திருந்தார். ரஜினிகாந்துக்கு ஆதரவாக அவர் பேசியதால், ரஜினி தொடங்க உள்ள கட்சியில் இணைவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அண்ணாமலை, இன்று காலை 11 மணி அளவில் டெல்லியில் பாஜக தலைவர் ஜே.பி நட்டா முன்னிலையில், அக்கட்சியில் இணைய உள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக அவர் கூறுகையில், “தமிழகத்தில் ஒரு மாற்றம் தேவைப்படுகிறது. பாஜகவால் மட்டுமே அதனை கொடுக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
ரஜினி தொடங்க உள்ள கட்சியில் ஏன் இணையவில்லை என்ற கேள்விக்கு விரிவான அறிக்கையை பின்னர் தர இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.