கொரோனா தடுப்பூசி திருட்டு வசமாக சிக்கினார் டாக்டர்..

கொரோனா தடுப்பூசிகளை திருடிச்சென்று, தன் உறவினர்கள், நண்பர்களுக்கு செலுத்தியதாக, அமெரிக்க டாக்டர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
டெக்சாஸ் மாநிலத்தை சேர்ந்த ஹசன் கோகல் என்ற அந்த டாக்டர், மாடர்னா நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசியின் ஒன்பது டோஸ் மருந்தை திருடிச்சென்றார் என்பது அவர் மீதான புகார்.
ஆனால், அந்த டாக்டரோ, ‘தடுப்பூசி மருந்தின் பாதுகாப்பு குடுவை சேதமாகி விட்டது. மருந்து வீணாகி விடாமல் தவிர்க்கவே, மனைவி உள்ளிட்ட உறவினர்கள், நண்பர்களுக்கு செலுத்தினேன்’ என்கிறார்.
ஆனால், சட்டபூர்வமாக யாருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமோ அவர்களுக்கு அளிக்காமல், உறவினர்கள், நண்பர்களுக்கு தடுப்பூசி போட்டது தவறு என்கின்றனர், அரசு அதிகாரிகள்.
சர்ச்சையை தொடர்ந்து, ஹசன் கோகல் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குற்றச்சாட்டு நிரூபணம் செய்யப்பட்டால், ஓராண்டு சிறை தண்டனையும், நான்காயிரம் டாலர் அபராதமும் அவருக்கு விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.