உலக கோப்பையை வெல்ல மற்றொரு முறை முயற்சி மேற்கொள்வேன்!!! கேப்டன் மிதாலிராஜ் பேட்டி…

புதுடெல்லி,

இந்திய பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் 37 வயதான மிதாலி ராஜ் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

2013-ம் ஆண்டு பெண்கள் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா நடத்திய போது நமது அணி ‘சூப்பர் சிக்ஸ்’ சுற்றுக்கு கூட முன்னேற முடியாமல் போனதால் நான் வேதனையும், ஏமாற்றமும் அடைந்தேன். 2017-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் வெற்றிக்காக முயற்சிக்கலாம் என்று நினைத்தேன். அதன்படி அந்த உலக கோப்பை போட்டிக்காக நான் கடினமாக உழைத்தேன். அந்த உலக கோப்பை போட்டியில் நமது அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றால் அந்த போட்டியுடன் ஓய்வு பெற்று விடலாம் என்று எண்ணினேன். ஆனால் இறுதிப்போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டோம். நீண்ட நாட்கள் விளையாடுவதன் மூலம் அனேகமாக நான் எல்லாவற்றையும் பெற்று விட்டேன். ஆனால் உலக கோப்பை மட்டும் எனக்கு இன்னும் கிட்டவில்லை. 2021-ம் ஆண்டு நடைபெறும் உலக கோப்பையை வெல்ல மற்றொரு முறை முயற்சி மேற்கொள்வேன். எல்லோருடைய வாழ்த்துகளுடனும், கடவுளின் ஆசியுடனும் இந்த முறை எங்களால் உலக கோப்பையை வெல்ல முடியும் என்று நம்புகிறேன்.

கிரிக்கெட் எனது வாழ்க்கையில் தானாக வந்ததாகும். ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ஆக வேண்டும் என்று தான் விரும்பினேன். பெண்கள் கிரிக்கெட், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 2006-07-ம் ஆண்டில் வந்தது. இதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பே இது நடந்து இருந்தால் இந்திய பெண்கள் கிரிக்கெட் இன்னும் சிறப்பான நிலையை எட்டி இருக்கும். அந்த காலகட்டத்தில் நிதி பிரச்சினை காரணமாக பல திறமையான வீராங்கனைகள் மற்ற துறைகளுக்கு மாறி விட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x