“போஸ்டர் ஒட்டுவதோடு நிறுத்திக்கணும்.. ஓட்டு கேட்டெல்லாம் போக கூடாது!” ரசிகர்களை எச்சரித்த அதிமுக அமைச்சர்!

எம்ஜிஆர், ஜெயலலிதா போலவே நடிகர் விஜய் இருக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் நினைப்பதில் எந்த தவறுமில்லை. ஆனால் அதே நேரத்தில் எம்ஜிஆர் ஜெயலலிதா பெயரைச் சொல்லி ஓட்டு கேட்டு போனால் அது நல்லதல்ல என்று அதிமுக அமைச்சர் ஒருவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக எம்ஜிஆரின் போஸ்டர்களை போலவே நடிகர் விஜய் போஸ்டர்களை உருவகப்படுத்தி, அவரது ரசிகர்கள் மாநிலம் முழுவதும் ஒட்டி வந்தனர். மதுரையில் ஆரம்பித்த இந்த எம்ஜிஆர்-விஜய் போஸ்டர் கலாச்சாரம் தற்போது தமிழகம் எங்கும் பரவி வருகிறது.

மேலும் விஜய் தான் அடுத்த முதல்வர் போன்ற பல வாசகங்கள் அந்த போஸ்டர்களில் இடம்பெற்று வந்தன. இந்த போஸ்டர்களுக்கு எம்ஜிஆரின் ரசிகர்கள் மற்றும் அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒரு சில இடங்களில் போஸ்டர்கள் கிழிப்பு, விஜய் ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு ஆகியவையும் நடந்து உள்ளது.
இந்த நிலையில் எம்ஜிஆர் பாணியில் விஜய் போஸ்டர் ஒட்டப்பட்டு வருவது குறித்த கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பதிலளித்துள்ளார். அவர், “எம்ஜிஆர் தோற்றத்தில் நடிகர் விஜய்க்கு ஒட்டிய போஸ்டர் குறித்து நான் எதுவும் கருத்து சொல்ல விரும்பவில்லை. அது அவரது ரசிகர்களின் விருப்பம். எம்ஜிஆர் ஜெயலலிதா போலவே அவர் இருக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் நினைப்பதில் எந்த தவறுமில்லை. அது வரவேற்கத்தக்க விஷயம் தான். ஆனால் அதே நேரத்தில் எம்ஜிஆர் ஜெயலலிதா பெயரைச் சொல்லி ஓட்டு கேட்டு போகாத வரை எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஏனெனில் எம்ஜிஆர் பெயரை சொல்லி ஓட்டுக் கேட்கும் உரிமை எங்களுக்கு மட்டுமே உள்ளது” என்று தெரிவித்தார்.
விஜய்-எம்ஜிஆர் போஸ்டர்களுக்கு எம்ஜிஆரின் ரசிகர்கள் மற்றும் அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.